முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11
பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது
சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று
கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள்
அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற
நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள்
அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர்.
தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில்
பேசத் தொடங்கினார்கள். அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து
நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில்
தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள்
ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர்.
எல்லாரும் மலைத்துப்போய், ``இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர்
அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம்
ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?'' என வியந்தனர். ``பார்த்தரும், மேதியரும்,
எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய
நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன்
நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து
தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும்,
அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள்
பேசக் கேட்கிறோமே!'' என்றனர்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
இரண்டாம் வாசகம்
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7. 12-13
சகோதரர் சகோதரிகளே, தூய ஆவியால்
ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் `இயேசுவே ஆண்டவர்' எனச் சொல்ல முடியாது.
இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால்
தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே.
செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும்
எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின்
செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.
உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல்
ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும்
கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும்
ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த
ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23
அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை.
யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை
மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று,
``உங்களுக்கு அமைதி உரித்தாகுக!'' என்று வாழ்த்தினார். இவ்வாறு
சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார்.
ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, ``உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை
என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார். இதைச்
சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, ``தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய
பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக