முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 19: 1-8
அப்பொல்லோ கொரிந்தில் இருந்தபோது பவுல்
மலைப்பாங்கான பகுதி வழியாக எபேசு வந்தார். அங்கு அவர் சில சீடர்களைக்
கண்டு, அவர்களை நோக்கி, ``நீங்கள் நம்பிக்கை கொண்டபோது தூய ஆவியால்
ஆட்கொள்ளப்பட்டீர்களா?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், ``தூய ஆவி
என்னும் ஒன்று உண்டு என்றுகூட நாங்கள் கேள்விப்பட்டதில்லையே''
என்றார்கள். ``அவ்வாறெனில் நீங்கள் எந்தத் திருமுழுக்கைப் பெற்றீர்கள்?''
எனப் பவுல் கேட்க, அவர்கள், ``நாங்கள் யோவான் கொடுத்த திருமுழுக்கைப்
பெற்றோம்'' என்றார்கள். அப்பொழுது பவுல், ``யோவான் மனம் மாறிய
மக்களுக்குத் திருமுழுக்குக் கொடுத்து, தமக்குப்பின் வரும் இயேசுவிடம்
நம்பிக்கை கொள்ளுமாறு கூறினார்'' என்றார். இதைக் கேட்ட மக்கள் ஆண்டவராகிய
இயேசுவின் பெயரில் திருமுழுக்குப் பெற்றனர். பவுல் அவர்கள்மீது கைகளை
வைத்ததும், தூய ஆவி அவர்கள்மேல் இறங்கியது. அப்பொழுது அவர்கள் பரவசப்
பேச்சுப் பேசினர்; இறைவாக்கும் உரைத்தனர். அங்கு ஏறக்குறைய பன்னிரண்டு பேர்
இருந்தனர். பின்பு பவுல் தொழுகைக்கூடம் சென்றார். அங்கு அவர் மூன்று
மாதங்கள் இறையாட்சி பற்றித் துணிவுடன் மக்களோடு பேசி அவர்களோடு
விவாதித்து அவர்களை நம்பச் செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
நற்செய்தி வாசகம்
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33
+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 29-33
அக்காலத்தில் சீடர்கள் இயேசுவிடம்,
``இப்போதுதான் உருவகம் எதுவுமின்றி வெளிப்படையாகப் பேசுகிறீர். உமக்கு
அனைத்தும் தெரியும். யாரும் உம்மிடம் கேள்வி கேட்கத் தேவையில்லை என்பது
எங்களுக்கு இப்போது புரிகிறது. இதிலிருந்து நீர் கடவுளிடமிருந்து வந்தவர்
என்பதை நம்புகிறோம்'' என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, ``இப்போது நம்புகிறீர்களா! இதோ! காலம்
வருகிறது; ஏன், வந்தேவிட்டது. அப்போது நீங்கள் சிதறடிக்கப்பட்டு
ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள்; என்னைத் தனியே
விட்டுவிடுவீர்கள். ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு
இருக்கிறார். என் வழியாய் நீங்கள் அமைதி காணும்பொருட்டே நான் இவற்றை
உங்களிடம் சொன்னேன். உலகில் உங்களுக்குத் துன்பம் உண்டு; எனினும் துணிவுடன்
இருங்கள். நான் உலகின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்'' என்றார்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக