முதல் வாசகம்
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14> 22-33
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14> 22-33
அப்பொழுது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து
நின்று, உரத்தக் குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்; "யூத மக்களே,
எருசலேமில் வாழும் மக்களே, இதைத் தெரிந்துக்கொள்ளுங்கள். எனது சொற்களைக்
கவனித்துக் கேளுங்கள். இஸ்ரயேல் மக்களே, நீங்கள் இந்த வார்த்தைகளைக்
கேளுங்கள்.கடவுள் நாசரேத்து இயேசுவின் வழியாக உங்கள் நடுவில்
வல்லசெயல்களையும் அருஞ்செயல்களையும் அடையாளங்களையும் செய்து, அவரை
இன்னாரென்று உறுதியாகக்காண்பித்தார். இது நீ;ங்கள் அறிந்ததே. கடவுள்
தாம் வரையறுத்துள்ள திட்டத்தின்படியும், தம் முன்னறிவின்படியும் இந்த
இயேசுவை உங்கள் கையில் விட்டுவிட்டார். நீ;ங்கள் திருச்சட்டம் அறியாதார்
மூலம் அவரைச் சிலுவையில் அறைந்துக்கொன்றீர்கள். ஆனால் கடவுள் அவரை
மரணவேதனையினின்று விடுவித்து உயிர்த்தெழச்செய்தார். ஏனென்றால் மரணம்
அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. தாவீது அவரைக்குறித்துக்
கூறியது; 'நான் ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என்
வலப்பக்கம் உள்ளார்; எனவே நான் அசைவுறேன். இதனால் என் இதயம்
பேறுவகைகொள்கின்றது; என் நா மகிழ்ச்சியால் நிறைந்துள்ளது. என் உடலும்
எதிர்பார்ப்பில் நிலைத்திருக்கும். ஏனென்றால் என்னைப் பாதாளத்திடம்
ஒப்புவிக்கமாட்டீர். உம் தூயவனைப் படுக்குழியைக் காணவிடமாட்டீர்.
வாழ்வின்வழியை நான் அறியச்செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான
மகிழ்ச்சி உண்டு.' ";சகோதர சகோதரிகளே, நமது குல முதல்வராகிய தாவீதைக்
குறித்து நான் சொல்வதை மறுக்கமாட்டீர்கள். அவர் காலமாகி அடக்கம்
செய்யப்பட்டார். அவர் கல்லறை இந்நாள்வரை நம்மிடையே இருக்கிறது. அவர்
இறைவாக்கினர் என்பதால், தம் வழித்தோன்றல் ஒருவர் அவரது அரியணையில்
வீற்றிருப்பார் என்று கடவுள் உறுதியாக ஆணையிட்டுக் கூறியதை
அறிந்திருந்தார். அவர் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலை முன்னறிந்து, 'அவரைப்
பாதாளத்திடம் ஒப்புவிக்கமாட்டீர்; அவரது உடல் படுகுழியைக்
காணவிடமாட்டீர்' என்று கூறியிருக்கிறார். கடவுள் இந்த இயேசுவை
உயிhத்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். அவர்
கடவுளின் வலதுப்பக்கத்;துக்கு உயர்த்தப்பட்டு, வாக்களிக்கப்பட்ட தூய
ஆவியைத் தம் தந்தையிடமிருந்து பெற்றுப் பொழிந்தருளினார். நீங்கள்
காண்பதும் கேட்பதும் இதுதான்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
தூய பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 17-21
நீங்கள் "தந்தையே" என அழைத்து மன்றாடுபவர், ஆளைப்
பார்த்தல்ல, அவரவர் செயல்களின் படியே தீர்ப்பு வழங்குகிறார். ஆகையால்
இவ்வுலகில் நீங்கள் அன்னியராய் வாழும் காலமெல்லாம் அவருக்கு அஞ்சி
வாழுங்கள் உங்கள் மூதாதையரிடமிருந்து வழிவழியாய் வந்த வீணான
நடத்தையினின்று உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை என்னவென்று
உங்களுக்குத் தெரியும். அது பொன்னும் வெள்ளியும் போன்று
அழிவுக்குட்பட்டது அல்ல; மாறாக, மாசு மறுவற்ற ஆட்டுக் குட்டியைப் போன்ற
கிறிஸ்துவின் உயர்மதிப்புள்ள இரத்தமாகும் உலகம் தோன்றுமுன்னரே
முன்குறிக்கப்பட்ட அவர், இந்தக் கடைசிக் காலத்தில் உங்களுக்காக
வெளிப்படுத்தப்பட்டார். அவர் வழியாகத்தான் நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை
கொண்டுள்ளீர்கள். இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து
பெருமைப்படுத்தியுள்ளார். இதனால் நீங்கள் கடவுளிடம் நம்பிக்கை கொண்டு அவரை
எதிர்நோக்கி இருக்கவே இவ்வாறு செய்தார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 13-35
வாரத்தின் முதல் நாள் சீடர்களுள் இருவர்
எருசலேமிலிருந்து ஏறத்தாழ பதினொரு கிலோ மீட்டர் தொலையிலுள்ள ஓர்
ஊருக்குச் சென்று கொண்டிருந்தனர். அவ்வூரின் பெயர் எம்மாவு. அவர்கள்
இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் குறித்து ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொண்டே
சென்றார்கள். இப்படி அவர்கள் உரையாடிக்கொண்டும் வினவிக்கொண்டும்
சென்றபோது, இயேசு நெருங்கிவந்து அவர்களோடு நடந்து சென்றார். ஆனால் அவர்
யார் என்று அறிந்து உணர முடியாதவாறு அவர்கள் கண்கள் மறைக்கப்பட்டிருந்தன.
அவர் அவர்களை நோக்கி, ``வழிநெடுகிலும் நீங்கள் ஒருவரோடு ஒருவர்
பேசிக்கொண்டிருப்பது என்ன?'' என்று கேட்டார். அவர்கள் முக வாட்டத்தோடு
நின்றார்கள்.
அவர்களுள் கிளயோப்பா என்னும் பெயருடைய ஒருவர் அவரிடம் மறுமொழியாக,
``எருசலேமில் தங்கியிருப்பவர்களுள் உமக்குமட்டும்தான் இந்நாள்களில்
நிகழ்ந்தவை தெரியாதோ!''என்றார்.
அதற்கு அவர் அவர்களிடம், ``என்ன நிகழ்ந்தது?'' என்று கேட்டார். அவர்கள்
அவரிடம், ``நாசரேத்து இயேசுவைப் பற்றியேதான் பேசுகின்றோம். அவர்
கடவுளுக்கும் மக்கள் எல்லாருக்கும் முன்பாகச் சொல்லிலும் செயலிலும் வல்ல
இறைவாக்கினராகத் திகழ்ந்தார். அவர் இஸ்ரயேலை மீட்கப் போகிறார் என்று
நாங்கள் எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் தலைமைக் குருக்களும்
ஆட்சியாளர்களும் அவருக்கு மரணதண்டனை விதித்துச் சிலுவையில் அறைந்தார்கள்.
இவையெல்லாம் நிகழ்ந்து இன்றோடு மூன்று நாள்கள் ஆகின்றன. ஆனால் இன்று
எங்களைச் சேர்ந்த பெண்களுள் சிலர் எங்களை மலைப்புக்குள்ளாக்கினர்; அவர்கள்
விடியற்காலையில் கல்லறைக்குச் சென்றார்கள்; அவருடைய உடலைக் காணாது
திரும்பி வந்து, வானதூதர்களைக் கண்டதாகவும் இயேசு உயிரோடிருக்கிறார்
என்று அவர்கள் கூறியதாகவும் சொன்னார்கள். எங்களோடு இருந்தவர்களுள்
சிலரும் கல்லறைக்குச் சென்று, அப்பெண்கள் சொன்னவாறே இருக்கக் கண்டனர்.
ஆனால் அவர்கள் இயேசுவைக் காணவில்லை'' என்றார்கள்.
இயேசு அவர்களை நோக்கி, ``அறிவிலிகளே! இறைவாக்கினர்கள் உரைத்த
எல்லாவற்றையும் நம்ப இயலாத மந்த உள்ளத்தினரே! மெசியா தாம்
மாட்சியடைவதற்குமுன் இத்துன்பங்களைப் படவேண்டுமல்லவா!'' என்றார். மேலும்
மோசேமுதல் இறைவாக்கினர்வரை அனைவரின் நூல்களிலும் தம்மைக் குறித்து
எழுதப்பட்ட யாவற்றையும் அவர் அவர்களுக்கு விளக்கினார்.
அவர்கள் தாங்கள் போகவேண்டிய ஊரை நெருங்கி வந்தார்கள். அவரோ அதற்கு
அப்பால் போகிறவர்போலக் காட்டிக்கொண்டார். அவர்கள் அவரிடம், ``எங்களோடு
தங்கும்; ஏனெனில் மாலை நேரம் ஆயிற்று; பொழுதும் போயிற்று'' என்று கூறிக்
கட்டாயப்படுத்தி அவரை இணங்கவைத்தார்கள். அவர் அங்குத் தங்குமாறு
அவர்களோடு சென்றார். அவர்களோடு அவர் பந்தியில் அமர்ந்திருந்தபோது
அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி, பிட்டு அவர்களுக்குக் கொடுத்தார்.
அப்போது அவர்கள் கண்கள் திறந்தன. அவர்களும் அவரை அடையாளம்
கண்டுகொண்டார்கள். உடனே அவர் அவர்களிடமிருந்து மறைந்துபோனார்.
அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, ``வழியிலே அவர் நம்மோடு பேசி,
மறைநூலை விளக்கும்போது நம் உள்ளம் பற்றி எரியவில்லையா?'' என்று
பேசிக்கொண்டார்கள். அந்நேரமே அவர்கள் புறப்பட்டு எருசலேமுக்குத்
திரும்பிப் போனார்கள். அங்கே பதினொருவரும் அவர்களோடு இருந்தவர்களும்
குழுமியிருக்கக் கண்டார்கள்.
அங்கிருந்தவர்கள், ``ஆண்டவர் உண்மையாகவே உயிருடன் எழுப்பப்பட்டார்.
அவர் சீமோனுக்குத் தோற்றம் அளித்துள்ளார்'' என்று சொன்னார்கள்.
அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப்
பிட்டுக்கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும்
அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக